எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக, மிகபிரம்மாண்டமாய் இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனத்தில், தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளன.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாண்டியர்களின் ஆபத்துதவிகளாக, வில்லன்களாக வரும் ரவிதாசன், சோம்பன் சாம்பவன், தேவராளன் என்கிற பரமேஸ்வரன், வரகுணன் ஆகிய கதாபாத்திரங்களில் கிஷோர், ரியாஸ்கான், வினய் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இவர்களது கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் மிரட்டலான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…