தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள நடிகர் அருண்விஜய் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளன. முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான பார்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடிக்கும் புதிய வெப்சீரிஸ் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் தனது மகன் அர்னவ் உடன் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக், மீண்டும் காவல்துறை அதிகாரியாக சீனம் மற்றும் குத்துச்சண்டை வீரராக மிரட்டியுள்ள பாக்ஸர் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண்விஜய் நடிப்பில் வரிசையாக ரிலீசாக உள்ளன.

இந்த வரிசையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை திரைப்படத்திலும் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். யானை திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யானை திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக “ஏலம்மா ஏலா” என்ற பாடல் நாளை (ஜனவரி 13) மாலை 5 மணிக்கு பொங்கல் பரிசாக ரிலீசாகிறது. அழகான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ இதோ...