தமிழக சட்டப் பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான சட்டப் பேரவைக் கூட்டம் சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகம் வருகை தந்தார். அப்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடவடிக்கைகளைக் கண்டித்து குரல் எழுப்புவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கி நடைடிபெற்று வருகிறது. 

அப்போது, திருக்குறள் கூறி சபாநாயகர் அப்பாவு அவையை தொடக்கி வைத்தார். 

அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்ட சபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அதன் பிறகே சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முக்கியமாக, நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்க தொடங்கியதும், அங்குள்ள இருக்கையில் எம்எல்ஏக்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்கும் படியான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு, சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை உள்ளிட்ட பிரச்சகைள் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தோடு கூட்டமாக கேள்வி எழுப்பினர்.

அப்போது பதில் அளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்த்து “முதலமைச்சராக இருந்த உங்களுக்கு, இன்று நிதி நிலை அறிக்கை மட்டும் படிக்கப்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தே பேச வேண்டும் என கூச்சல் போடுகிறீர்கள்” என்று, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்தார்.

ஆனாலும், இதனையெல்லாம் துளியும் பொருட்படுத்தாத அதிமுகவினர், அதிமுகவினரின் கைது மற்றும் ரெய்டுகளுக்கு கண்டனம் தெரிவித்துகண்டன முழக்கங்களை எழுப்பினர். 

அதன் தொடர்ச்சியாகவே தமிழக அரசின் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப் பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, இது தொடர்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார்.