மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை பாவனா தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பாவனா இயக்குனர் வசந்தபாலனின் வெயில், நடிகர் ஜெயம் ரவியின் தீபாவளி, நடிகர் அஜித்குமாரின் அசல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆடம் ஜான் எனும் மலையாளப் படத்தில் நடித்த பாவனா தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் மலையாள சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்த பாவனா சமீபத்தில் மீண்டும் மலையாள சினிமாவில் நடிப்பதை ஊடகங்களுக்கு அறிவித்தார்.

அந்த வகையில் இயக்குனர் அதில் மைமூநாத் அஷ்ரப் எழுதி இயக்கும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premondarnn)  திரைப்படத்தில் பாவனா கதாநாயகியாக நடிக்க உள்ளார். Bonhomie என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அருண் ரஷ்டி ஒளிப்பதிவு செய்ய பால் மேத்யூஸ் நிஷாந்த் ராம்டிகே ஜோக்கர் ப்ளூஸ் இணைந்து இசை அமைக்கின்றனர். 

பாவனாவின் இந்த ரீ என்ட்ரிக்கு தென்னிந்திய திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர். விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.