ஆகச் சிறந்த நடிகராக தனது தேர்ந்த நடிப்பால் தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு பல வெரைட்டியான திரைப்படங்களை வழங்கி வருபவர் நடிகர் சீயான் விக்ரம். அந்தவகையில் அடுத்ததாக பலவிதமான கெட்டப்புகளில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரை உலகின் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். இந்த ஆண்டு கோடை வெளியீடாக பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ள சீயான் விக்ரம் முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மகான். முதல் முறை சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவிருக்கும் மகான் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக மகான் படத்தில் இருந்து வெளிவந்த டீசர், ட்ரைலர் & பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக ரிச் ரிச்  பாடல் நாளை (பிப்ரவரி 5ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.