தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய முதல் மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா 17 வயது. இவர் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில்  லாவண்யா கடந்த 9-ம் தேதி விஷம் குடித்துள்ளார். விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை  கைது செய்தனர். இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி லாவண்யா இறந்தார்.

மேலும் தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய பள்ளிநிர்வாகம் முயற்சித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியும், விடுதி கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். இதனால், மன உளைச்சளுக்கு ஆளாகி தனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவி லாவண்யாவின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்டாய மதமாற்றம் என்பதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. எம்மதமும் சம்மதமே. அனைத்து மதமும் சம்மதம். முதலமைச்சரின் நிலையும் அதுதான் என்று தெரிவித்தார்.