“1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் மே 6 ஆம் தேதி முதல், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும்” என்று, பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.

அதாவது, “தமிழ்நாட்டில் தேர்வுகள் எதுவுமின்றி 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி” என்கிற தகவல் ஒன்று கடந்த சில நாட்களாகவே மீண்டும் உலா வந்தன. 

இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சற்று குழப்பம் அடைந்தனர். எனினும், இது தொடர்பான செய்திகள், சமூக ஊடகத்தில் முற்றிலும் பரவி வந்தன.

இந்த நிலையில் தான், “குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன் படி, “1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் மே 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகள் நடைபெறும்” என்று, பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

அதாவது, நேற்றைய தினம் “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி பெற்றவர்கள்” என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறையானது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

அதன் தொடர்ச்சியாகவே, “தமிழகத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த இடை நிற்றலும் இல்லாமல் முழுமையாக தேர்ச்சி வழங்கப்படும்” என்கிற செய்திகளும் வெளியானது. 

இப்படியான வெளியான இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, பள்ளி கல்வித் துறை, “திட்டமிட்டபடி மே 6 ஆம் தேதி முதல் இறுதி தேர்வுகள் தொடங்கும்” என்று, உறுதிப்பட கூறியுள்ளது.

அத்துடன், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, தமிழக மாணவர்களின் கல்வித் திறன் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்” ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, இல்லம் தேதி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நேரில் சென்று அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.

எனினும், ஏற்கனவே இருக்க கூடிய கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது விதியாக இருந்து வருகிறது. 

என்றாலும், “மாணவர்கள் தேர்வை எதிர் கொள்ள கூடிய திறன் அவர்களுக்கு குறைந்து போய்விட கூடாது என்பதற்காக, இந்தாண்டுக்கான இறுதித் தேர்வானது நடத்தப்படுவதாக” பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்திருக்கிறது.

அந்த வகையில், “திட்டமிட்டபடி மே 6 ஆம் தேதி முதல், 13 ஆம் தேதி வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அந்த இறுதித் தேர்வானது தொடங்கும்” என்று, பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. 

“மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள கூடிய திறனை ஊக்குவிப்பதற்காக இது போன்ற பொது தேர்வுகள் நடைபெறும் என்றும், அதே போல் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும்,1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் நிச்சயம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.