தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து ெசய்யப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ந் தேதி திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

mkstalin

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

மேலும் முதற்கட்டமாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 12 வரை பள்ளிகளை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சிலமணி நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத்தொடர்ந்து கல்லூரிகளை பொறுத்தவரை பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வுகள் முடிந்த பிறகு நேரடி வகுப்புகள் நடைபெறுவதற்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வருகிற 1-ம் தேதி பிப்ரவரி  முதல் 15-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் விவரம் வருமாறு:
* சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவேண்டும்.

* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

* பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.

* அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.

* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 பேர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

* இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர்.

தியேட்டர்களில்50 சதவீதம் பேருக்கு அனுமதி

* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து தியேட்டர்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.

* அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

* அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் நீர் விளையாட்டுகளை தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன. அதன் விவரங்கள் வருமாறு:

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

* தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-ந்தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* 28-ம் தேதி இன்று முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது. அதேபோல் வரும் ஞாயிற்றுக்கிழமை 30-நம் தேதி முழு ஊரடங்கு கிடையாது.

இதுதவிர சில பொது அறிவுரைகள் வருமாறு:

* இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

* கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யவேண்டும்.

* கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்கவேண்டும்.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுகின்றன. அதன் விவரங்கள் வருமாறு:
* நோய்த்தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.

* வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், பின்வரும் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவேண்டும். இந்த நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

* மக்களாகிய உங்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட தளர்வுகள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.