அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பண விநியோகம் நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டின. இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் லேசான சலசலப்பும் ஏற்பட்டது. 

அப்போது, சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இருக்கும் 49 வது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் நரேஷ் என்ற நபர், அத்துமீறி புகுந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி, அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து பேரணியாக அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபற்றி தனது ஃபேஸ்புக் வலைதளத்திலும் ஜெயக்குமார் வெளியிட்டார்.

அத்துடன், பொது இடத்தில் ஒரு மனிதனை அரை நிர்வாணப்படுத்தி, அடித்து இழுத்து பேரணியாக அழைத்துச் சென்றதற்கு திமுக உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும், அதிமுகவினரால் தாக்கப்பட்ட நரேஷ் என்ற நபர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நரேஷ், இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். 

சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த அதிமுக முன்னாள் ஜெயக்குமாரை, நேற்று நள்ளிரவில் கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறிப்பாக, அதிமுகவினர் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அத்துடன், நுங்கம்பாக்கம் காவல் நிலைய பகுதியில் அதிமுகவினர் அதிக அளவில் திரண்டுள்ளதால், அவரை வேறு காவல் நிலையம் அழைத்துச் சென்று ரிமாண்ட் பணியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

அதன் படி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஜார்ஜ் டவுண் 15 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.