தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள்: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்துவைப்பு!

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள்: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்துவைப்பு! - Daily news

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி வழியாக திறந்துவைக்கிறார்.

தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி அடங்கும். ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம் 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த 11 புதிய மருத்துவக்கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திரமோடி விருதுநகரில் இன்று நடைபெற இருந்த பிரமாண்ட விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாகதெரிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளையும் அவர் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும்  இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்களையும் திறந்துவைக்கிறார். மேலும் மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் அவர் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்கிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில், மொத்தம் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தற்போது, இந்த 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்படுவதன் மூலம் கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
 

Leave a Comment