தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விஷாலுடன் இணைந்து நடிகர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஷால் முன்னதாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடிக்கும் திரைப்படம் லத்தி.

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து லத்தி படத்தில் சுனைனா & பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர்.

லத்தி படத்திற்கு  பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் லத்தி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.