கடந்த 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். 

கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகிறது. லக்‌ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அக்ஷய் குமார் ரசிகர்கள். 

இந்நிலையில் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. தமிழில் வெளியானதை போல் காமெடி கலந்த ஹாரர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த புடவை கட்டும் காட்சி, முகத்தில் மஞ்சள் பூசுவது போன்ற காட்சிகள் காஞ்சனா படத்தை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது.  

இந்தப் படத்திற்காக புடவை உடுத்தியது நல்ல அனுபவம் என்று அக்ஷய் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். புடவை ஒரு நல்ல உடை. எல்லா அளவில் இருப்பவர்களுக்கும் சரியாக இருக்கும். புடவை அணிந்து ஓடும் பேருந்து, ட்ரெய்னில் ஏறும் பெண்களை, தினசரி வேலை செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். என்னால் புடவையில் நடக்கக்கூட முடியவில்லை. இதை உடுத்திச் சமாளிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் புடவை உடுத்திப் பார்த்தால்தான் தெரியும் என்று அக்‌ஷய் குமார் பேசியிருந்தார்.

சிறந்த ஆக்ஷன் நடிகராக வளம்வரும் இவர் ஆரம்ப காலம் முதலே சிறந்த சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலத்திலும் இவர் கோடிக்கணக்கில் அரசுக்கும் பொது மக்களுக்கும் நிதி கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்றபோது இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கிலும் கொரோனா விழிப்புணர்வு குறித்த அரசு விளம்பரங்களில் நடித்தார். 

லக்ஷ்மி பாம் படத்தை தொடர்ந்து பெல் பாட்டம் திரைப்படம் அக்ஷய் குமார் கைவசம் உள்ளது. பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் தலைவாசல் விஜய்யும் நடிக்கிறார். இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நிறைவடைந்தது. இதன் டீஸரும் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

இந்த படத்திற்கு பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.