திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ். சினிமா தாண்டி நிஜ வாழ்விலும் லாரன்ஸ் ஹீரோ தான். ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவிற்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் சந்திரமுகி 2 படம் குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். 

அதில், சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயினாக ஜோதிகா மேம், சிம்ரன் மேம் மற்றும் கியரா அத்வானி இவர்கள் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தவறான செய்தி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். ஸ்கிரிப்ட் பணிகள் போய் கொண்டிருக்கிறது. கொரோனா பிரச்னைகள் முடிந்தவுடன் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் லாரன்ஸ்.  லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் லாரன்ஸ் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவரின் வீடியோவை பார்த்து விட்டு அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன். யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்றார்.

லாரன்ஸ் பகிர்ந்த அந்த வீடியோவில் வாலிபர் கூறியிருப்பதாவது, வழிப்போக்கனா சுத்திகிட்டு இருந்தேன். சுத்தி அப்படியே மதுரைக்கு வந்தபோது மதுரைலயும் நான் ஜங்ஷன்ல ஒரு 7 மாசமா ஜங்ஷன்ல படுத்து எந்திரிச்சு பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தேன். 

ஊடரங்கு அமலுக்கு வந்தபோது கடைகள் எல்லாம் அடைப்பு என்பதால் டீ போடலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வீடு வாடகைக்கு எடுக்கணும். அதற்கு பணம் தேவைப்பட்டுச்சு. நான் பிச்சை எடுத்ததில் சேர்த்து வைத்திருந்தேன். பிச்சை எடுக்கிறதுல எனக்கு தினமும் ரூ. 100 முதல் 150 வரை கிடைக்கும்.

அன்றாடம் ரூ. 50 முதல் 60 வரை செலவு பண்ணி சாப்பிட்டு மீதத்த சேர்த்து வைத்திருந்தேன். அதில் ரூ. 7 ஆயிரம் பணம் இருந்துச்சி. அதில் ரூ. 5 ஆயிரம் வீட்டிற்கும், ரூ. 2000 டீ போடுவதற்கும் முதலீடு பண்ணினேன். அதுல காலை, மாலை என இரண்டு வேளை டீ கொடுப்பேன். அலங்காநல்லூர், காந்தி கிராமம், மேட்டுப்பட்டி, புதுப்பட்டி இங்க சுற்றியுள்ள நகரப்பகுதிகளுக்கு எல்லா இடத்திலேயும் போய் டீ கொடுப்பேன்.

சைக்கிளில் போயி டீ விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். டீ வந்து ரூ. 10க்கு சேல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுல எனக்கு நல்ல ஒரு வருமானம் வந்திட்டு இருந்துச்சி. அந்த வருமானத்துல நான் வந்து சிரமப்பட்டு அதாவது உணவில்லாம சிரமப்பட்டதால சாலை ஓரங்கள் கோவிலில் இருக்கிற ஏழை மக்களுக்கு வந்து அன்றாட ஒரு 10 சாப்பாடு. காலைல ஒரு 10 சாப்பாடு, மதியம் ஒரு 10 சாப்பாடு, நைட்டு ஒரு 10 சாப்பாடு கொடுக்கணும்னு சொல்லி முடிவு பண்ணியிருந்தேன்.

அந்த சாப்பாடை நான் கடைகள் எதுலயும் வாங்காமல், நானே என் வீட்டில் அரிசி, பருப்பு எல்லாமே வாங்கி நானே சமைச்சி, அவங்களுக்கு நானே பார்சல் கட்டி எல்லாமே, தண்ணி பாட்டிலுடன் தேடி போயி நானே கொடுத்து வந்திட்டு இருக்கேன் என்று பேசியுள்ளார் அந்த இளைஞர். இந்த இளைஞனின் செயலை பாராட்டி பதிவு செய்த லாரன்ஸ். இவருக்கு 1 லட்சம் ரூபாய் தர முடிவுசெய்துள்ளார்.