திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ். சினிமா தாண்டி நிஜ வாழ்விலும் லாரன்ஸ் ஹீரோ தான். ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவிற்கு உதவி செய்து வருகிறார். தற்போது காஞ்சனா ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தை இயக்கியுள்ளார். இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். 

கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகிறது. லக்‌ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் சிங்கிளான புர்ஜ் கலிஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. தமிழில் வெளியானதை போல் காமெடி கலந்த ஹாரர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 7-வது படமாகும். இந்த படத்தின் டைட்டில் லுக் வரும் அக்டோபர் 29-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ். பி வாசு இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜிவி பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பது இதுவே முதல் முறையாகும். படத்தின் இயக்குனர் பற்றிய விவரம் 29-ம் தேதி வெளியாகும். 

ஜிவி பிரகாஷ் சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.