அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்த ரசிகர்களோ, செம ட்ரீட் இருக்கு என்ற ஆவலில் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

துக்ளக் தர்பார் படத்தில் பார்த்திபன் ராசிமான் என்கிற அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்நிலையில் வெளியான டீஸரை பார்த்த நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டீஸர் காட்சிகளில் வந்த போஸ்டர்களை பார்த்தால் அது எங்கள் கட்சி போஸ்டரை போன்றே இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

சீமானை குறிக்கும் வகையில் தான் ராசிமான் என்று பார்த்திபன் கதாபாத்திரம் உள்ளது என்றும்...கட்சிக் கொடி, அதன் நிறம் கூட நாம் தமிழர் கட்சிக் கொடியை போன்றே இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. எங்கள் அண்ணன் சீமானை அசிங்கப்படுத்தும் வகையில் இப்படி செய்துள்ளனர். உடனடியாக அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இந்த விஷயம் இணையத்தில் வெடித்தது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக துக்ளக் தர்பார்குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.

(புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும் நாம் தமிழர் தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தர மாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.