2018-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ஜோசப். பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், அத்மியா ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழில் விசித்திரன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

இயக்குனர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார். தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். 

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படத்தின் டீஸர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. 

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015ஆம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார். 

இந்நிலையில் விசித்திரன் என்ற அதே டைட்டிலை பயன்படுத்தி பி ஸ்டுடியோ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். இது குறித்து, சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், “நான் சி.எஸ்.கே புரொடக்சன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு விசித்திரன் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன். 

இந்தப் பதிவை அவ்வப்போது புதுப்பித்து வருவதால் மார்ச் மாதம் வரை இந்த தலைப்பு எனக்கு சொந்தமானதாகும். இந்த தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன் யாராவது இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்களா என்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிடம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டு விசாரணை நடத்தி உறுதி செய்தது. அதன் பின்னரே இந்த தலைப்பை எனக்கு ஒதுக்கியது.

இந்த நிலையில் விசித்திரன் என்கிற தலைப்பைப் பயன்படுத்தி பி ஸ்டூடியோ நிறுவனர் பாலா ஒரு படத்தை தயாரித்துள்ளார். இதில் இணை தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் விளம்பரம் யூடியூப்பில் அண்மையில் வெளியானது. எனவே எனக்கு சொந்தமான விசித்திரன் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு குறித்து பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குனர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.