ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் விஜய் டிவியில் ரிலீசான படம் மண்டேலா. அதைத்தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

அதில், மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பதும், காரில் ஏற அறுகதை இல்லை என காரின் பின்னே ஓடி வர சொல்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதகாவும் இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோன் அஸ்வின் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.