மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொண்டதாக கொடுத்த வழக்கில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் ராஜகோபலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில் நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என அவரின் மனைவி சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் தனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார். தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு உள்ளதாகவும், எந்த ஆதாரங்களும், அடிப்படையும் இல்லாமல் தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளராகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு, சம்பவம் நடைபெற்ற போது ஆன் லைன் வகுப்புகள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் வழங்கவில்லை என்றும் கூறி, ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.