“கல்வித் துறையில் காவிகளின் தலையீட்டை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சூளுரைத்து உள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. ஆங்கிலம் மற்றும் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் இலக்கியங்கள் பாடமாக எழுத்தாளர் அருந்ததி ராய் நூலிலிருந்து சில பகுதிகள் வைக்கப்பட்டிருந்தன” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“வாக்கிங் வித் காம்ரேட்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் மத்திய இந்தியாவின் காடுகளிலுள்ள ஆயுதப் போராட்ட குழுவினரைச் சந்தித்த நிகழ்வுகளை விளக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலாகும். இதிலிருந்துதான், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருந்தனர்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்ஃஎஸ்.ஸின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்தியார்த்தி பரிசத் துணை வேந்தரிடம் கோரியுள்ளது என்றும், இதனை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கிவிட்டு வேறு ஒரு பாடத்தை வைத்து உள்ளனர்” என்றும், பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். 

அத்துடன், “ஆங்கில இலக்கிய உலகின் தலை சிறந்த எழுத்தாளராகத் திகழும் அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றவர் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி குரல் எழுப்பி வருபவர்” என்றும், வைகோ கூறியுள்ளார். 

“இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் பாசிச இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் கருத்தியல் போரை நடத்தி வருபவர். ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா, ஏ.பி.வி.பி அராஜகத்தால் தற்கொலை செய்து கொண்ட போதும், டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட போதும், அருந்ததி ராய் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்” என்றும், வைகோ தெரிவித்து உள்ளார். 

மேலும், “ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்படுவதையும் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும் தொடர்ந்து  விமர்சித்து வருகிறார் என்றும், இந்தியாவை பாசிசத்தின் கொடும் கரங்கள் வளைத்து உள்ளதை உலக நாடுகளின் கவனத்திற்கு தன்னுடைய கட்டுரைகள் மூலம் கொண்டு சென்றவர் என்பதால் அருந்ததிராய் மீது இந்துத்துவ கும்பல் எரிச்சல் உற்று இருக்கிறது” என்பதையும், வைகோ சுட்டிக்காட்டி உள்ளார். 

அதே போல், “சனாதன சக்திகளுக்கு அடி பணிந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகத்தின் கருத்துக்கள் நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்றும், வைகோ எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

“தமிழகத்தில் கல்வித் துறையில் காவிகளின் தலையீடு ஆபத்தான போக்கிற்கு வழிகோலும் வகையில் உருவாகி வருவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி அரசு இது போன்ற சக்திகளை கண்டும் காணாதது போல் இருந்தால் தமிழக மக்கள் ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், வைகோ தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, “தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்” என்றும், மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “கேந்திரிய விதயாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே தமிழ் கற்பிக்க உத்தரவிட வேண்டும்” என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோரிக்கை விடுத்து உள்ளார்.