கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க. பா.ம.க. தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களில் இருந்து விலகி 1134 பேர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். காணொலிக் வழியாக இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், வரவேற்றார். பின்னர் தி.மு.க.வில் புதிதாக இணைந்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார் அவர்.

அப்போது அவர் பேசிய பிறவற்றின் தொகுப்பு :

``இரண்டே மாதத்தில் ஒரு இயக்கத்தில் 20 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள் என்றால் அது உலகத்திலேயே நமது இயக்கத்தில் மட்டும்தான். கூட்டம் கூட்டமாக தி.மு.க.வை நோக்கிப் புதியவர்கள் ஈர்க்கப்படுவதைப் பார்த்து முதல்வர் பொறாமைப்படுகிறார்.  எந்தச் சூழலிலும் தி.மு.க. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறதே என்று வேதனைப்படுகிறார் அவர். கொரோனா காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டார்களே என்று கோபப்படுகிறார்.

இந்தப் பொறாமையும், வேதனையும் கோபமும் அவருக்கு என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவுக்கு அவரை ஆத்திரத்தில் உளற வைக்கிறது. ஒரு முதல்வர் என்ன மாதிரி பேசக் கூடாதோ அந்த மாதிரி எல்லாம் பேசுகிறார். என்னை ஆண்டவன் கவனித்துக் கொள்வார் என்று சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைப் போல பாவங்களை மட்டுமே செய்து கொண்டிருப்பவனல்ல நான். அதனால் அவர் தான் பயப்பட வேண்டுமே தவிர நான் பயப்படத் தேவையில்லை.

தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எத்தகைய துரோகத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காதவர் பழனிசாமி. தன்னை ஏதோ ஜெயலலிதா போலவே நினைத்துக் கொள்கிறார். தூத்துக்குடி சென்ற பழனிசாமி பயணம் செய்யும் பாதையில் கட்டாயப்படுத்தி கடையை மூட வைத்துள்ளார்கள். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கடைகள் மூன்று மணி நேரம் மூடப்பட்டதற்கு  தன்னை ஏதோ பெரிய அதிகாரம் பொருந்தியவராக நினைத்துக் கொள்கிறாரா? அல்லது யாராவது மக்கள் வந்து கருப்புக் கொடி காட்டிவிடக் கூடாது என்று பயந்தாரா? இவர் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார் என்பதால் அவரை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்கள். ஜெயலலிதா சாலையில் பயணம் செய்யும் போதுகூட கடைகளை மூடச் சொல்வது இல்லை. 

‘கோ பேக் இபிஎஸ்’ என்று சமூக இணையதளங்களில் செய்திகள் பரவியதால் பயந்து போய் இப்படி கடையை மூடச் சொன்னாரா என்று சந்தேகமாக உள்ளது. அதாவது மக்களைச் சந்திக்கப் பயப்படும் முதல்வரைப் பார்க்கிறோம்.

இவர் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார் என்பதால் அவரை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்கள். அதனுடைய வெளிப்பாடு தான் இணையதளங்கள் மூலமாக இருபது இலட்சம் பேர் இணைவதும்; இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் நீங்கள் இணைவதும்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல்தான் அவரது தொழில். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எத்தகைய துரோகத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காதவர் பழனிசாமி. மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் நீங்கள் கழகத்தினுள் வந்து சேர்ந்துள்ளீர்கள்"

மேலும் அவர், ``ஒரு முதல்வர் என்ன மாதிரி பேசக் கூடாதோ அந்த மாதிரி எல்லாம் பேசுகிறார்" என்று எடப்பாடி பழனிச்சாமி குறித்து குறிப்பிட்டுள்ளார்