அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ``எ பிராமிஸ்ட் லாண்ட்" என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில், உலக உளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளார். அந்த நூல் குறித்து, அமெரிக்காவின் புகழ்மிக்க பத்திரிகையான `தி நியூயார்க் டைம்ஸ்' விமர்சனம் எழுதியுள்ளது. 

அந்த நினைவுக்குறிப்பின் விமர்சனத்தில், அதிபர் ஒபாமா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து ``பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர், மாணவரைப் போல பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட விஷயத்தில் ஆழ்ந்த அறிவு பெறுவதற்கான ஆர்வமோ அல்லது தகுதியோ இல்லாதவராக உள்ளார்" என ஒபாமா தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவர் குறிப்பிடுகையில், ``அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்" எனத் ஒபாமா தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.. 

அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி குறித்து குறிப்பிடுகையில், ``எங்களிடம் சார்லி கிறிஸ்ட் மற்றும் ரஹ் இமானுவேல் போன்ற ஆண்களின் அழகு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது,  ஆனால், சோனியா காந்தியைப் போல, ஒன்று அல்லது இரு சம்பவங்கள் தவிர்த்து பெண்களின் அழகு குறித்துச் சொல்லப்படவில்லை" என்றும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து, "உடல்ரீதியாக அவர் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை" என்றும், அமெரிக்க அதிபராக தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் பற்றி குறிப்பிடுகையில், ``அவர் மிகவும் ஒழுக்கமான, நேர்மையான, விசுவாசமான மனிதர்" எனக் குறிப்பிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

இவற்றோடு சேர்த்து, தான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்கு வருகை தந்தது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 2010 ஆண்டு ஒபாமா அவரது மனைவியுடன் இந்தியா வந்திருந்தபோது அப்போதைய பிரதமர் மனமோகன்சிங், அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகிய இருவருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நபர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கும் போதும், ராகுல் காந்தி குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராகுல் மிகவும் பதற்றமானவர் என்று குறிப்பிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டும் உள்ளது. அதற்கு, ``அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது பற்றி கருத்துக் கூறமுடியாது" என காங்கிரஸ் கட்சி மறுத்ததாக தெரிகிறது.

மேலும், ``ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளைக் கொண்ட புத்தகம் பற்றி, பின்னால் இருந்து இயக்கப்படும் ஊடகத்தில் வெளியான செய்திகள் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை" என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

சில காங்கிரஸ் தலைவர்கள் பராக் ஒபாமாவின் கருத்தை எதிர்த்திருக்கிறார்கள். "ஒபாமா அவர்களே, யார் ஒருவராலும் வெறும் 5 முதல் 10 நிமிடத்தில் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. சில சமயங்களில் பல ஆண்டுகள் கூட ஆகலாம். ராகுல் காந்தியைப் பற்றி நீங்கள் மதிப்பிட்டது தவறு" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் கூறியுள்ளார்.