தமிழக ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. உதயசூரியனின் உரையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தி உள்ளார்.

16 வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நேற்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. 

இதில், நேற்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது பேசத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “வணக்கம்” என்று, தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்” என்றும், அவர் தமிழ் மொழியை புகழ்ந்து பேசினார்.

அத்துடன், “அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு முக்கிய சிறப்பம்சங்கள்” அதில் இடம் பெற்றன. 

மேலும், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி வரை, 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 2 வது நாளான இன்று, சட்டசபை கூட்டம் காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார்.

அந்த நேரத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை திமுக உறுப்பினர் உதயசூரியன் முன்மொழிந்தார்.

அப்போது, உதயசூரியன் பேசும் போது, “நீட்டை உருவாக்குவதற்காக திமுக முயற்சிக்கிறது” என்ற, தவறான சொல்லை பதற்றத்தில் கூறிவிட்டார்.

இதனால், உடனடியாக எழுந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆளும் கட்சி உறுப்பினர் உதயசூரியன் தனது உரையில், பதற்றம் காரணமாக நீட்டை உருவாக்க என்று  தெரிவித்ததை, நீட்டிலிருந்து விலக்குப் பெறுவதற்காக என மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டார். அதன் படி, பேரவைத் தலைவர் அப்பாவு அதனை மாற்றம் செய்தார்.