“மாணவிகளை கட்டிப்பிடித்தது ஏன்?” என்று, போலீசாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, புகார் அளிக்கப்பட்டது. இதனால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை
அமைக்கப்பட்டு, தலைமறைவான சிவசங்கர் பாபாவை தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், அவரை நேற்று முன்தினம் இரவவோடு இரவாக சென்னை அழைத்து வந்து, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் 5 அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

அத்துடன், சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பாக, மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, தனிப்படை போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அதே நேரத்தில், கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு சிபிசிஐடி காவல் துறை சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றனர். அப்போது, சிபிசிஐடி காவல் துறைக்கு சிவசங்கர் பாபா Lounge என்று கூறப்படும், அவரது பிரமாண்ட சொகுசு அறையைக் காட்டினார். அதில் தான், பல ஆண்டுகளாக மாணவிகளுக்குப் அவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால், சிபிசிஐடி காவல் துறையினர் பள்ளியில் அதிரடி சோதனை நடத்தியபோது, பாபாவின் இந்த சொகுசு அறையைப் பள்ளி ஊழியர்கள் காட்டாமல் மறைத்து விட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

அப்போது, சிவசங்கர் பாபா போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகள் அனைத்தும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில், பள்ளி மாணவிகளுடன் நடனமாடியதை சிவசங்கர் பாபா, போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். 

குறிப்பாக, “குழந்தை வயதுள்ள மாணவிகளை, நான் காமத்தோடு கட்டிப்பிடிக்கவில்லை என்றும், பாசத்தோடும், நட்பு ரீதியாகவும் மட்டுமே கட்டிப்பிடித்து நடனம் ஆடினேன்” என்றும், சிவசங்கர் பாபா தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார் என்று, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆனாலும், சென்னை அடுத்த புதுபாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் இன்றும் சோதனை நடத்தினர். சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், இந்த அதிரடி சோதனை தொடரவே செய்கிறது. அதன் படி, 5 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் ஒரு மணி நேரமாக சோதனை நடத்தினர். 

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.