அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர், தனது பள்ளியில் பணியாற்றி வந்த கர்ப்பிணி ஆசிரியைக்கு வாட்ஸ்ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அந்த பள்ளியின் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகள் அளித்ததாக எழுந்த புகார்கள் பெரும் புயலைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், கர்ப்பிணி ஆசிரியைக்கு, அந்த பள்ளியின் ஆண் தலைமை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள எகல்சிங்காவில் செயல்பட்டு வரும் பினாயின் அரசு மேல்நிலைப் பள்ளியில், தேவேந்திர குமார் சங்கலா என்பவர், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில், 7 மாத கர்ப்பிணிப் பெண் ஆசிரியை ஒருவரும் பணி புரிந்து வருகிறார். 

இந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவேந்திர குமார் சங்கலா, அந்த கர்ப்பிணி ஆசிரியைக்கு பல ஆபாசமான வீடியோக்கள் மற்றும் தகவல்களை வாட்ஸ்ஆபில் அனுப்பி வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். 

இதனால், அந்த பெண் ஆசிரியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அத்துடன், அந்த ஆசிரியை பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அந்த பெண் ஆசிரியை, அங்குள்ள பினாய் காவல் நிலையத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், “பள்ளி தலைமை ஆசிரியர் தேவேந்திர குமார் சங்கலா, வாட்ஸ்ஆப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், நான் அதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால், அவரின் பதவியைப் பயன்படுத்தி எனக்கு நெருக்கடி கொடுத்து, என்னை அவமதிக்கும் வேலைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும்” அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “அந்த பெண் வேண்டும் என்றே, என்னை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினார் என்றும், ஆனால் நான் கர்ப்பமாக இருப்பதால் அங்கே சென்று பணியில் சேர இயலவில்லை என கேட்ட போது, தலைமை ஆசிரியரின் நடவடிக்கைகள் இன்னும் மோசமாகிக்கொண்டே சென்றதால், ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து நான் ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், எனக்குள் நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கிறேன்” என்றும், அந்த பெண் ஆசிரியை கூறியுள்ளார்.

இந்த பாலியல் புகார் தொடர்பாக போலீசார் அந்த தலைமை ஆசிரியரை காவல் நிலையம் அழைத்து உள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜராக வந்த தலைமை ஆசிரியர், கர்ப்பிணி ஆசிரியையை காவல் நிலையத்தில் வைத்தே கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியரான தேவேந்திர குமார் சங்கலா மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, கர்ப்பிணி என்றும் பாராமல் தலைமை ஆசிரியர், சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, மிரட்டிய சம்பவம் கடும் அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.