இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
 
கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை" என்று கூறியிருக்கிறார்.

இதுவொரு பக்கம் இருந்தாலும், அடுத்த மாதம் முதல், நாடெங்கும் திரையரங்குகள் திறக்கப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

கடுமையான தனி மனித இடைவெளி (Social Distancing) மற்றும் சுத்திகரிப்பு விதிகளோடு, மற்ற கட்டிடங்களைச் சாராமல் தனியாக இருக்கும் சினிமா அரங்குகளை திறக்க அரசாங்கம் அனுமதிக்கக்கூடும்.

சினிமா அரங்குகள் மீண்டும் திறக்க வழங்கப்பட்டவுள்ள நிலையான இயக்க நடைமுறைகளில், திரைப்பட பார்வையாளர்கள் மாற்று வரிசைகளில் அமர்வது, ஒரே வரிசையில் மூன்று இருக்கைகள் இடைவெளியில் அமர்வது ஆகியவை இருக்கும். ஒரே நேரத்தில் அரங்கத்தில் அமர்ந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்படும்.

வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளில் காற்றின் வெப்பநிலையை 24 டிகிரிக்கு மேல் வைத்திருப்பதும் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.

ஸ்பெஷல் எஃபெக்டுகளைக் கொண்ட சில திரைப்படங்களுக்கு மட்டுமே 3 டி கண்ணாடிகள் தேவைப்பட்டாலும், திரைப்பட பார்வையாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசத்தை (Face Mask) அணிந்திருக்க வேண்டும். கை சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வு செய்திகள் இடைவேளையின் போது ஒளிபரப்பப்படும் என்று அறிக்கை கூறுகிறது. தனித்து நிற்கும் சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படக்கூடும் என செய்தி வந்திருக்கும் அதே வேளையில், ​​மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் சினிமா அரங்குகள் குறித்து எந்த தெளிவும் இல்லை.

ஜிம் மற்றும் யோகா மையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், சினிமா ஹால்களையும் திறக்க வேண்டும் என அந்த உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தொடர்பில்லா டிக்கெட் வழங்கல், சீரான சுத்திகரிப்பு வழிகள் ஆகிய விதிமுறைகளுடன் சினிமா அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தற்போது அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறை காட்சி முடிந்தபின்னரும், சினிமா அரங்கம் முழுவதும் சுத்திகரிக்கப்படுவதை அரங்கத்தின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மாத இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்!