கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் இரண்டாவது முறையாக சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று வெளியிட்டிருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் அல்லது சுயநிதி கல்லூரிகள், நிறுவனங்கள், தனியார் அல்லது சுயநிதி பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி, நிறுவனங்கள், மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் என ஆறு பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் (ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ) வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 2020ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நேற்று (ஆகஸ்ட் 18) நடந்தது. முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
 
இந்த நிகழ்வில்ல் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், இணை மந்திரி சஞ்சய் தோத்ரே, உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே, அகில இந்திய தொழில்நுட்பகல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே, கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மதிப்பீடு செய்யும் குழுவின் தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி, கல்வி அமைச்சகத்தின் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி அபே ஜெரி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், ``மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரிவுகளில் 674 நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பிரிவுகளின் கீழ் 496 நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்திருந்தது" எனக்கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, “கல்விக்கான இதயத்துடிப்பாக புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவேண்டும். சிறப்பானவற்றை உருவாக்குவதற்கான தேடல் முக்கிய விதிமுறையாக இருக்கவேண்டியது அவசியம். தரவரிசையில் உயர்ந்த இடங்களைப்பிடித்த கல்வி நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன். சிறப்பான இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களின் தலைமையை மட்டுமல்ல, அதில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று அனைவரையும் நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசை பட்டியல், இந்திய கல்வி நிறுவனங்களை உலகளாவிய சிறந்த கல்வி நிறுவனமாக மாற மேலும் ஊக்குவிக்கும். தரவரிசை பட்டியல், உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் வழக்கமான பாதையில் இருந்து மாறுபட்டு, உயர்தர ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்குதலில் கவனம் செலுத்தவே இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

எண்ணிக்கையைவிட, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான சவால்களை எதிர்கொள்ளவும், அதற்கு தேவையான தீர்வுகளை உருவாக்கவும், தன்னம்பிக்கை உதவுகிறது. சோதனைகள், ஆராய்ச்சிக்கான சாதகமான சூழலை உருவாக்க, இந்திய உயர்கல்வி முக்கிய பங்காற்ற வேண்டியது அவசியம். உள்நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதிலும் இந்திய உயர்கல்வி அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.