“அதிமுக வை ஓரங்கட்டி திமுக வை எதிர்க்கட்சியாக்குவதே பாஜக வின் திட்டம்” என்று, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில், திமுக எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, அன்றாடம் திமுக வுக்கு எதிராகக் கடுமையாக பாஜக பேசி வருவதாக” குறிப்பிட்டு உள்ளார்.

“இது மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, ஆரியத்துவா பாஜகவுக்குத் திராவிடத் திமுக மீது அவ்வளவு வெறுப்பு என்று தோன்றும். ஆனால், பாஜக வின் உண்மைத் திட்டம் திமுக ஒழிப்பல்ல; அதிமுக வை ஓரங்கட்டுவது தான்” என்று, பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

“தமிழ்நாட்டு அரசியல், அதிமுக எதிர் திமுக என்று இரு முனை முகாம்களாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் உடனடித் திட்டம். இதைப் பாஜக எதிர் திமுக என்று மாற்ற வேண்டும் என்பது அதன் போர் உத்தி” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

மேலும், “எதிர்க்கட்சி என்ற நிலையில் திமுக இருக்க வேண்டும்; ஆளுங்கட்சியாகவோ அல்லது முதன்மை எதிர்க்கட்சியாகவோ அதிமுக இருக்கக் கூடாது என்பதே பாஜக வின் வேலைத் திட்டம்” என்றும், மணியரசன் பட்டவத் தனமாகப் போட்டு உடைத்து உள்ளார்.

“அதிமுக வுக்கு வலிமையான தலைமை இல்லை என்பதால், அதை ஓரங்கட்ட முடியும் என்று பாஜக கருதுகிறது. இதற்காகத் தான், 24 மணி நேரமும் திமுக எதிர்ப்புப் பரப்புரை செய்கிறது பாஜக. தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் முதலிடத்தில் வைத்துப் பாஜக வையும் திமுக வையும் பேச வேண்டும். பாஜக கதாநாயகன், திமுக வில்லன் என்பது போல் மக்களிடையே விவாதங்களைக் கிளப்ப வேண்டும்” என்பதே, அந்த கட்சியின் நோக்கம் என்றும், அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, “ஆரியத்துவா கையாளும் உளவியல் போர் முறை இது. ஆளும் அதிமுக வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, எடப்பாடி தலைமையை இடது காலால் எத்தி விடுகிறார் பாஜக தலைவர் எல்.முருகன்” என்றும், மணியரசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“பாஜக கைகாட்டும் நபர் தான் அடுத்த தமிழ் நாட்டு முதலமைச்சர்; பாஜக பங்கேற்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்”, “டிசம்பர் வாக்கில் தமிழ் நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்” என, இவையெல்லாம் பாஜக வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல்.முருகன் பேசியவை” என்றும், மணியரசன் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டி உள்ளார்.

“எடப்பாடி - ஓ.பி.எஸ் தலைமை, பாஜக வின் அடாவடித்தனங்களுக்கு உரியவாறு எதிர்வினை ஆற்றாமல் பம்மிப் பதுங்குகிறது. ஏன்? பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு! மோடி ஏவி விட்டால் டெல்லியின் பல்வேறு துறையினர் அதிமுக தலைவர்களின் உறவினர்களின் நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும். ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும். 

திமுக எதிர்க்கட்சியாக இருப்பதால், ஆரியத்துவாவுக்கோ, பாஜக வுக்கோ ஆபத்து 
ஒன்றுமில்லை. பழைய நட்புக் கழகம்; திமுக வின், அதன் திராவிட ஊதுகுழல்களின் திராவிடப் பரப்புரைகள், தமிழ்த்தேசிய வளர்ச்சியைத் தமிழர் இன உணர்ச்சியைத் தடுக்கப் பயன்படும்; கூப்பிட்டால் கூட்டணிக்கு வந்து விடும்; இந்தியத் தேசிய ஏகபோகத்தின் கையடக்கப் பதிப்பு தி.மு.க.; இவையெல்லாம் பாஜக வின் கணிப்பு. 

எனவே, திமுக. விற்கு எதிர்வகை விளம்பரம் (Negative Propaganda) கொடுப்பதற்காக பாஜக வினர் எந்நேரமும் திமுக எதிர்ப்புப் பேசுகின்றனர்” என்று, அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே நேரத்தில், அதிமுக வை எளிதாகக் கலைத்துப் போடலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளார்கள். பாஜக - ஆரியத்துவா பாசிசக் கட்சி! பாஜக பாசிசத்தை எதிர்ப்பதற்குத் திமுக அணியை வலுப்படுத்த வேண்டும் என்று பலர் பேசுகின்றனர். வலிக்காமல் வாக்குச்சாவடி மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்பவர்களின் மனக் கணக்கு இது. நோகாமல் நொங்கெடுக்க நினைப்பவர்கள் இவர்கள். தமிழ்த் தேசியம் பேசுவோரிலும் ஒருசாரார் “வாக்குச்சாவடிப் புரட்சி” யில் பெரு நம்பிக்கை வைத்துள்ளார்கள். வாக்குச்சாவடி வேண்டாம் என்பது நமது வாதமல்ல; வாக்குச் சாவடியை முதன்மைப்படுத்தாதீர்கள்; வாக்குச்சாவடி மூலம் தமிழ்த்தேசியம் வெற்றி பெறும் என்று எண்ணாதீர்கள்” என்றும், கூறியுள்ளார்.

“எந்த அடக்கு முறை வந்தாலும் எதிர்கொண்டு, ஆரியத்துவா பாசிசத்தை முறியடிக்க முன்னேறுவோம்; லட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் தமிழ்த் தேசிய உரமேற்றி எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் உளவியலை உருவாக்குவோம்”  என்பவற்றைத் தமிழ்த் தேசியர்கள் முதற்பெரும் கடமையாக ஏற்க வேண்டும்” என்றும், பெ.மணியரசன் வலியுறுத்தி உள்ளார்.