ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார். 

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. கொரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் RJ பாலாஜி, மூக்குத்தி அம்மனை சந்தித்தவுடன் அவர் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி படமாக இருந்தாலும், நிகழ்கால சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். மதத்தை வைத்து நடக்கும் வியாபார விஷயங்கள் குறித்தும் இந்த படம் பேசியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் ஆடி குத்து மற்றும் பகவதி பாபா பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் பற்றி தெரியவந்தது. கிளைமாக்ஸ் காட்சி 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட  இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாக மூக்குத்தி அம்மன் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக படத்தின் எதிர்பார்ப்பு குறித்து வீடியோ வாயிலாக பேசி பதிவு செய்திருந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், T நட்ராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர். 

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இந்த நகைச்சுவையான காட்சியில், குலதெய்வம் மூக்குத்தி அம்மனை குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் RJ பாலாஜி. ஊர்வசியின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தாங்கள் விரும்பும் வசதியான வாழ்க்கையை அம்மனிடம் கேட்கின்றனர்.