சிறையில் போலீஸ்காரர் தன் கையில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டிவனம் சிறையில் தான், பணிச்சுமை காரணமாக போலீஸ்காரர் ஒருவர் பிளேடால் தன் கையில் கிழித்துக்கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

திண்டிவனம் நல்லியக்கோடன் நகரை சேர்ந்த ராமு என்பவரின் மகன் 26 வயதான பாரதி மணிகண்டன், திண்டிவனம் கிளை சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். 

போலீசான பாரதி மணிகண்டன், கடந்த 5 மாதத்துக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, பாரதி மணிகண்டனின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக சென்றுகொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் இருந்த போதே, பாரதி மணிகண்டன் திடீரென தான் வைத்திருந்த பிளேடால் தன்னுடைய இடது கை மணிக்கட்டில் கிழித்து கொண்டார். 

இதனால், அவரது கையில் ரத்தம் பீரிட்டு வெளியேறியது. அப்போது பணியில் இருந்த சக போலீசார், இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து, தகவல் அறிந்ததும் திண்டிவனம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், பாரதி மணிகண்டனிடம் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாரதி மணிகண்டன்  கூறும் போது, “திண்டிவனம் கிளை சிறையில் பணியின் போது அமர்வதற்கு நாற்காலி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது, நாற்காலியில் அமரக்கூடாது என்று ஜெயிலர் கூறி விட்டார். இதனால், கடந்த சில நாட்களாக நின்று கொண்டே பணியில் இருந்தேன்” என்று, குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், “கடந்த சில நாட்களில் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறேன். அப்போது, நேற்று காலை 9 மணிக்கு பணிக்கு வந்து, இரவு 7 மணி வரை நின்று கொண்டே இருந்தேன். மேலும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. இதனால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன்” என்று, அவர் வாக்கு மூலம் அளித்து உள்ளார். 

இதன் காரணமாக, திண்டிவனம் கிளை சிறையில் உள்ள ஜெயிலரிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். 

இந்த விசாரணையில், திண்டிவனம் கிளை சிறையில் பணியாற்றும் சக காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், திண்டிவனம் கிளை சிறை ஜெயிலருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, பணிச்சுமையால் போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டிவனத்தில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள சக போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், கடந்த காலங்களில் பணிச்சுமை காரணமாக, பல போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் வரிசையாக நடந்ததும் குறிப்பிடத்தக்கது.