தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை குறைபாடு தொடர்பாக 304 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக எடுத்துள்ளதாகத் தமிழக டிஜிபி, நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், சிவகங்கை நீதிமன்றம் பாலமுருகனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயிர் நீதிமன்ற மதுரை கிளையில், பாலமுருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, “கவனக்குறைவாகவும், தன் விருப்பம் போலவும் விசாரணை அதிகாரி செயல் பட்டுள்ளார் என்றும், இதன் காரணமாக மனுதாரர் விடுவிக்கப்படுகிறார்” என்று தீர்ப்பு அளித்தார். 

அதன் தொடர்ச்சியாக, “காவல் துறையின் விசாரணையின் தரம் குறைந்து உள்ளதால், குற்றவாளிகள் விடுதலையாவது அதிகரித்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 

இதன் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையாகும் போது, “சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இந்த வழக்கில் முறையற்ற விசாரணையால் பாதிக்கப்பட்டோருக்கு, ஏன் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கூடாது” என்பது குறித்து டிஜிபி தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் உதவி ஐஜி திருநாவுக்கரசு, ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், “‘போலீஸ் நிலையாணை மற்றும் சுற்றறிக்கைகள் படி முறையான விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று, குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அத்துடன், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது 2020 வரை குற்ற உள்ள வழக்குகளில் முறையான விசாரணை மேற்கொள்ளாத போலீஸ் அதிகாரிகள் 304 பேர் மீது, இது வரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்கு தொடர்பான தினசரி அறிக்கைகள், அந்தந்த மாவட்ட எஸ்.பி.கள் மூலம் டிஐஜி மற்றும் ஐஜி ஆகியோரால் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும. “போலீஸ் அகாடமி மூலம் அறிவியல்பூர்வ விசாரணை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து பேசிய நீதிபதி, “சட்டப்படியான உரிமைகளுடன், பாதுகாப்புடன் ஒவ்வொரு குடிமகனும் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

அத்துடன், “பாகுபாடின்றி சட்டம் கண்டிப்புடன் அமலாக வேண்டும் என்றும், முறையாக விசாரிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை அவசியம்” என்றும், நீதிபதி கேட்டுக்கொண்டார். 

“விசாரணையை மாற்றக்கோரியும், போலீசாரிடம் இருந்து இழப்பீடு கோரியும் நாள் தோறும் ஏராளமான மனுக்கள் தாக்கலாகின்றன என்று குறிப்பிட்ட நீதிபதி,  முறையான விசாரணை இல்லாததால் தான், சாட்சிகள் பிறழ் சாட்சியாகின்றனர் என்றும், குற்றம் சாட்டப்பட்டோர் தப்பிப்பதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி என்றும், இதனால், 10 ஆண்டுக்கும் மேல் வீணாகியுள்ளது” என்றும், நீதிபதி கவலைத் தெரிவித்தார். 

இதன் காரணமாக, “பாதிக்கப்பட்ட பெண்ணான கொலையானவரின் குடும்பத்தைச் சேர்ந்த அன்ன லட்சுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகப் பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்றும். இந்தப் பணத்தைச் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் வசூலிக்கலாம்” என்றும், நீதிபதி கூறினார்.

குறிப்பாக, “லஞ்சம், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தையே அனைவரும் விரும்புகின்றனர் என்றும், இதற்கான நீதிபதி ராஜன் குழு பரிந்துரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும், நீதிபதி உறுதிப்படத் தெரிவித்தார்.