“நடிகர் சூர்யாவை அச்சுறுத்தவோ, மிரட்டவோ நினைத்தால் அது மிக மோசமான எதிர்விளைவுகளைத் தான் தரும்” என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்து கூறியிருந்தார்.

இதனால், பாஜக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தடன், “இந்த ஒளிப்பதிவு சட்டம் பற்றி விவாதிக்க தயாரா?” என்றும், பாஜக கேள்வி எழுப்பியது.

மேலும், நடிகர் சூர்யாவை அச்சுறுத்தும் விதமாக பாஜகவைச் சேர்ந்த சிலர், தொடர்ந்து கருத்து கூறி வந்ததாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அந்த அறிக்கையில், “இந்தியா அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்தியா கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றை மயமாக்கலையும், அதிகாரக் குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச் சட்டமான ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத் தம்பி சூர்யாவை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம் தான் என்றும், அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக  வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது” என்றும், சீமான் பாராட்டி உள்ளார். 

“கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத் திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக் குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது என்றும், அதனை உளப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்” என்றும், சீமான் பாராட்டி உள்ளார். 

“சூர்யாவின் இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “அறிவியலுக்கும், அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், ஆபாசமாகப் பேசுவதும், சமூக விரோதி, தேசத் துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென ஜனநாயக விரோதங்களை அரங்கேற்றி வரும் பாஜக, நடிகர் சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது” என்றும், கடுமையாக விமர்சித்து உள்ளார். 

“நடிகர் சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்” என்றும், சீமான் எதிர் வாதம் தொடுத்து உள்ளார். 

“பாஜகவின் ஆட்சி முறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டு வருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் குறித்தும் வாதிட தர்க்க ரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன்” என்றும், சீமான் அறிவித்து உள்ளார். 

குறிப்பாக, “என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா? என்றும், எங்களை எதிர்கொள்ளத் துளியளவாவது துணிவிருக்கிறதா?” என்றும், சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். 

முக்கியமாக, “எங்களைத் தாண்டித் தான் சூர்யாவை நெருங்க முடியும் என்றும், சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில்  இருக்கும்  அதிகாரப் பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால், அது மிக மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்” என்றும், சீமான் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.