சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் டெத் விவகாரத்தில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் இருவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த கொடுஞ் செயலுக்கு பெரும்பாலன இந்திய பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இது குறித்து, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரணை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த 5 போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அத்துடன், பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, பல விசயங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்க தெரிய வந்தது. அதன் படி, இந்த வழக்கில் பணியில் இருந்த 5 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் விடிய விடிய தாக்கியதும் தெரிய வந்தது. இதனால், ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் 5 பிரண்ட்ஸ் ஆப் போலீசாக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் விசாரணை நடத்த முயன்ற போது, அவர்கள் 5 பேரும் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, தமிழகத்தின் பெரும்பாலன மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அடுத்த 2 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் தடை விதிக்காமல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும், சாத்தான் குளம் தந்தை - மகன்  கைதான போது, அதை நேரில் பார்த்த பொது மக்களிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து, அதன் படி சிலரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், இன்னும் சிலரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், பொது மக்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் அனுப்பி, அவர்களை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.  

இதன் தொடர்ச்சியாக, சாத்தான் குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தின் போது, பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 5 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தற்போது அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறக, 5 பேரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், சாத்தான் குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்த்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வேல்முத்து ஆகியோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சாத்தான் குளம் வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.