“தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை” என்று முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், சென்னையில் மையம் கொண்டு 4 புறமும் பொதுமக்களைச் சுற்றி அடிக்கிறது. இதனால், சென்னை மக்கள் கொரோனா வைரசுக்கு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழக அரசு சார்பாக சென்னை கிண்டியில் 127 கோடி ரூபாய் செலவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய நவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டது.  

இந்த நவீன மருத்துவமனையானது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொறுப்பில் ஒப்படைக்கப் படுகிறது. அத்துடன், இந்த நவீன சிறப்பு மருத்துவமனையில் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்படுகின்றனர். 

மேலும், நாளை முதல் இந்த புதிய மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை முதல் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, இங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளன. மேலும், சிடி ஸ்கேன், எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்பட உள்ளன.

அத்துடன், இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 300 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்காக 20 வெண்டிலேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் 30 பேர் அமர்ந்து படிக்கும் வசதி கொண்ட நூலகமும், 20 பேர் ஒரே நேரத்தில் டிவி பார்க்கும் வகையில் வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. அத்துடன், காணொலி காட்சி மூலம் யோகா பயிற்சி செய்யும் வசதி மற்றும் வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய வசதிகள் இந்த புதிய மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பான முறையில் தமிழக அரசு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக” குறிப்பிட்டார்.

“கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

“இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்குச் சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதே வேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்கிற வகையிலும்” தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“எந்தவித கால தாமதமும் இன்றி உடனடி சிகிச்சை தந்து உயிர் இழப்புகளைத் தடுக்க மருத்துவமனைகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரசு எடுத்த நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ளது” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை” என்றும் உறுதிப்படக் கூறினார்.

“மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றும், மக்கள் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறையும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
 
“கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்றும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

மேலும், “தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.