வேலூரில் மாமியார் மிரட்டியதால், திருமணம் ஆன 2 வது மாதத்திலேயே புது மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ் மொணவூர் அம்மன் நகரைச் சேர்ந்த 30 வயதான அஜய் குமார், அன்றாட கூலி வேலை செய்து வந்தார். அதே போல், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரின் மகள் அர்ச்சனா, வேலூர் மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். 

இதனிடையே, அஜய் குமாரும் - அர்ச்சனாவும் காதலித்து வந்துள்ளனர். இவரும், காதலர்களாகப் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம், அர்ச்சனா வீட்டில் தெரிய வந்துள்ள நிலையில், அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக, காதலர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்யத் திட்டமிட்டனர். அதன் படி, இருவரும் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்திற்குப் பிறகு, கீழ் மொணவூரில் வாடகைக்கு இருவரும் வீடு எடுத்து தம்பதிகளாக வாழ்க்கை நடத்த தொடங்கினர். இவர்களது திருமண வாழ்க்கையில் அடுத்த 3 வது நாளே புயல் வீசத் தொடங்கி உள்ளது.

அதாவது, அஜய் குமாரும் - அர்ச்சனாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணம் ஆன அடுத்த 3 வது நாளே மனைவி அர்ச்சனாவின் நடத்தையில் அஜய் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இதனால், அன்றைய தினமே இருவருக்கம் பிரச்சனைக்கு ஏற்பட்ட நிலையில், அர்ச்சனா தன் அம்மா வீட்டிற்குச் சென்று உள்ளார்.

மேலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில், கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து தாய் வீட்டில் அர்ச்சனா ஓய்வு எடுத்துக்கொண்டு வந்தார். இதனையடுத்து, மனைவியை குடும்பம் நடத்த அஜய் குமார் அழைத்துள்ளார். ஆனால், அர்ச்சனா அவருடன் வர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால், அஜய் குமார் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதன் காரணமாக, தன்னுடைய காதல் மனைவி குடும்பம் நடத்த வராமல், தன்னிடமிருந்து விலகிச் செல்வதாக நினைத்த அஜய் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதனால், கடந்த ஒரு வார காலமாக மாமியார் வீட்டுக்குச் சென்று, மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கெஞ்சி உள்ளார்.

ஆனால், மாமியாரோ தன் மகள் அர்ச்சனாவை, அஜய் குமாருடன் அனுப்பி வைக்க மறுத்துள்ளார். அத்துடன், மகள் மீது சந்தேகப்பட்டதை மாமியார் வன்மையாகக் கண்டித்து உள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஜய் குமார், சனிக் கிழமை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அஜய் குமார், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, செஃல்பி வீடியோ ஒன்றைப் பதிவு செய்து, தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்,வாட்ஸ்ஆப் மூலம் அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அஜய் குமாரின் நண்பர்களும், உறவினர்களும் அஜய் குமாரின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அஜய் குமார் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அஜய் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அஜய் குமார் நண்பர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்ஆப் வீடியோவில், தன்னுடைய மாமியார் தன்னை திட்டியதாலேயே அந்த தற்கொலை முடிவை எடுத்தார் என்று, அஜய் குமாரின் நண்பர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

இதனிடையே, கணவன் திட்டியதால், மனைவியும்; மனைவி திட்டியதால் கணவரும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளைத் தான், கடந்த காலங்களில் நாம் கண் கூடாகப் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால், முதன் முறையாக மாமியார் திட்டி, மருமகன் அதுவும் திருமணம் ஆன 3 மாதத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.