15 வயது சிறுமியை ஏமாற்றி 25 வயது இளைஞர் திருமணம் செய்த நிலையில், அந்த 15 வயது சிறுமி தற்போது குழந்தை பெற்றெடுத்து உள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த 25 வயதான பசுபதி, அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர், வேலை விசயமாக ஈரோட்டிற்கு சென்ற நிலையில், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அப்போது, 25 வயதான பசுபதிக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், சிறுமியை தனது காதல் வலையில் பசுபதி வீழ்த்தி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த 15 வயது சிறுமியை பல முறை ஏமாற்றிய தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் பசுபதி.

இந்த விசயம் எப்படியோ, அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பசுபதியை அழைத்துக் கண்டித்து உள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, சிறுமியைக் கடத்திச் சென்ற பசுபதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வந்து சிறுமியை திருமணம் செய்துகொண்டார். 

அத்துடன், அங்கேயே வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் அவர் குடும்பம் நடத்தியும் வந்து உள்ளார். அதன் பின்னர் சேலம் சன்னியாசி குண்டுக்கு சிறுமியை அழைத்து வந்து, அங்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுமி கர்ப்பமாகியுள்ளார். கடந்த 9 மாதங்களை எப்படியோ சமாளித்து வந்த பசுபதி, கடந்த 15 ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை அழைத்துக் கொண்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து உள்ளார். அப்போது,பிரசவ வார்டில் இருந்த மருத்துவர் சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அந்த சிறுமிக்கு வெறும் 15 வயது தான் ஆகிறது என்பது உறுதி செய்யப்பட்டதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக, இது குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அதே நாளில் சிறுமிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “ஈரோட்டிற்கு வேலைக்கு வந்த பசுபதிக்கும், இந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் பல முறை சிறுமியை ஏமாற்றிய பசுபதி அவருடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தார் என்றும், இந்த விசயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி வந்ததும்” தெரிய வந்தது.

இதனால், பசுபதி மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது, பசுபதி சிறுமியுடன் மருத்துவமனையில் இருந்து அவரைக் கவனித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், “பசுபதியை உடனடியாக கைது செய்வதா? அல்லது சிறுமி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு கைது செய்வதா?” என்பது குறித்தும் போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.