மாமனார் வாங்கிவந்த பூச்சிமருந்தை, மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் - மகன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பகுதியில், மாமனார் பெரியசாமியிடம் அவரது மருமகள் பாரதி, போண்டா செய்வதற்காக மைதா மாவு வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். 

Ranipet youth dies after eating pesticide

கடைக்குச் சென்ற பெரியசாமி, மருமகள் கேட்ட மைதா மாவை வாங்கி உள்ளார். கூடவே, தன்னுடைய வயலுக்குப் பயன்படுத்துவதற்காக பூச்சிமருந்து பாக்கெட்டையும் வாங்கி, இரண்டையும் ஒரே பையில் கொண்டு வந்து வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனையடுத்து, மாமனார் வாங்கி வந்த பையைப் பார்த்த மருமகள், பூச்சி மருந்துக்கும் - மைதா மாவுக்கும் வித்தியாசம் தெரியாமல், இரண்டையும் எடுத்துப் பார்த்துள்ளார். இதில், இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததைப் பார்த்த மருமகள், பூச்சி மருந்தை மைதா மாவு என நினைத்து, போண்டா செய்து தன் கணவர் சுகுமாருக்கு சுட சுட கொடுத்துள்ளார். 

இதில், அவர் 4 போண்டா சாப்பிட்ட நிலையில், மருமகள் தனது பங்கிற்கு 3 போண்டா சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து, தனது மாமியார் லட்சுமிக்கு அவர் சில போண்டாக்களை கொடுத்த நிலையில், அதில் அவர் ஒரு போண்டா மட்டும் சாப்பிட்டுள்ளார்.

Ranipet youth dies after eating pesticide

அந்த நேரம் பார்த்து, வெளியே சென்றிருந்த மாமனார் வீட்டிற்குள் வரவே, அவருக்கும் மருமகள் சாப்பிட போண்டா கொடுத்துள்ளார். போண்டாவை சாப்பிடப் பெரியசாமி கையில் எடுத்தபோது, அதில் பூச்சிமருந்து வாசனை அடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தான் வாங்கி வந்த பையை போய் பார்த்துள்ளார். அதில், பூச்சிமருந்து இல்லாத நிலையில், மைதா மாவு அப்படியே இருந்துள்ளது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பெரியசாமி, உடனடியாக போண்டா சாப்பிட்ட மனைவி, மகன், மருமகள் ஆகிய 3 பேரையும் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மருமகள் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று காலை அவரது மகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும், அவருடைய மனைவி மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமனார் பெரியசாமியிடம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணம் ஆன ஒரு வருடத்தில் பூச்சி மருந்தை, மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் - மகன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.