கூட்டத்தைக் கூட்டி வாளுடன் போலீசை எச்சரித்த பெண் சாமியார்!
By Aruvi | Galatta | 02:02 PM
உத்தரப்பிரதேசத்தில் கூட்டத்தைக் கூட்டி வாளுடன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்த பெண் சாமியார் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிப்பாட்டு முறைக்கும் அதிரடியாக அரசு தடை விதித்துள்ளது.
அத்துடன், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவையான உணவு மற்றும் காய்கறிகள் வாங்கத் திறந்திருக்கும் கடைகளிலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் சாமியார் ஒருவர், ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ‘மா ஆதி சக்தி’ என்பவர், தனது வீட்டில் 50 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தார்.
இந்த தகவல், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்க விரைந்து வந்த போலீசார், அங்கு கூடியிருந்த அனைவரையும் கலைந்து போகச் சொல்லி எச்சரித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெண் சாமியார், தன் ஆசிரமத்தில் வைத்திருந்த வாளுடன் வெளியே வந்து, போலீசாரை கடுமையாக எச்சரித்து, அங்கிருந்து செல்லும்படி அதிகமாகப் பேசி உள்ளார்.
இதனால், கடும் ஆத்திரமடைந்த போலீசார், அங்கு கூடி நின்றவர்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். அத்துடன், போலீசாருக்கு வாளுடன் வந்து எச்சரிக்கை விடுத்த பெண் சாமியாரையும் கைது செய்து, ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.