தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளது. பிற மாவட்டங்களில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் மேலும் தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று (நவம்பர் 19) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று 1,714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,63,282 என்றாகியுள்ளது. இதில், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,135 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 32-வது நாளாக சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 10 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,531 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,311 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,37,281 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 14,470 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றோடு சேர்த்து, நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 67,014 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,12,66,091 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ``வரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது. இந்த காலங்களில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்" என்று அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

``தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டுமான பகுதிகளில், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரு நாட்களாக தஞ்சாவூரில் ஒரு கட்டுமான பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்க கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்கள் ‘ஆன்டிஜென்’ பரிசோதனை மட்டும் செய்வதால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில், பல கொரோனா பாதிப்பை கண்டறியாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.