தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சைப் பலனின்றி நேற்று நள்ளிரவு நேரத்தில் காலமானார் என அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 13 -ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் வெளிவந்ததை அடுத்து, முதல்வரை நேரில் சென்று துக்கம் விசாரிக்க, 72 வயது மதிக்கத்தக்க தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். அப்படி அவர் செல்லும்போது, வழியில் திண்டிவனம் அருகே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, அமைச்சரின் உடல்நலம் குறித்து அறிய, அக்டோபர் 20 ம் தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார். அங்கே அமைச்சர் துரைக்கண்ணுவிடம் காணொலி காட்சி வழியாக பேசி, நலம் விசாரித்திருந்தார். மேலும் அவரது உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் டாக்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாக சொல்லப்பட்டது. மேலும் துரைக்கண்ணு குடும்பத்தாரையும் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் முடிவில், அமைச்சரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக அக்டோபர் 25, காலை 4 மணி முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. மேலும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது. அமைச்சருக்கு ஏற்கெனவே உடல்சார்ந்த சில சிக்கல்கள் இருப்பதால், அவரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக, அவர் சிகிச்சை எடுத்து வந்த மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் முடிவில், அமைச்சரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக அக்டோபர் 25, காலை 4 மணி முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. மேலும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியனது. அமைச்சருக்கு ஏற்கெனவே உடல்சார்ந்த சில சிக்கல்கள் இருப்பதால், தற்போது அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரச்னைகளுக்கிடையில், அமைச்சருக்கு முழு முயற்சியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக, மருத்துவமனை சார்பில் அக்டோபர் 25 ம் தேதி, அறிக்கை வெளியிடப்பட்டது.

அமைச்சரின் உடல்நலம் குறித்த தகவலை அறிந்தவுடன், அவர் சிகிச்சைப் பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு, மீண்டுமொருமுறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினருடன் கேட்டறிந்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.

இப்படியாக, அக்டோபர் 25 தொடங்கி, தொடர்ந்து ஆறு நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்து வந்தார். ஏழாம் நாளான நேற்று (அக்டோபர் 31) மதியம் ஒரு மணி அளவில், மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாகவும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பிறகு, மருத்துவமனை தரப்பில் அமைச்சர் காலமானதாக செய்தி வெளியிடப்பட்டது. நேற்று (அக்டோபர் 31) பகல் நேரத்தில் மிக மோசமானதாக கூறப்பட்டிருந்த அமைச்சரின் உடல்நலம், மிகவும் மோசமாகி, சிகிச்சை பலனின்றி இறுதியில் அமைச்சர் இயற்கை எய்தினார் என்ற அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர், அக்டோபர் 31, இரவு 11.15 மணிக்கு பிரிந்தத்தாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.