மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நல அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் முன்பு விசாரணை நடத்திய நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து சென்னை மாநகராட்சிக்கு கேள்விகள் எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது என்பது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 21ஆம் தேதி 3 மணி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கடற்கரைகளுக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. எனினும், மெரினா கடற்கரைக்கு மக்கள் சென்ற வண்ணம் இருந்த நிலையில், அனுமதியை மீறி கடற்கரையின் மணல் பரப்புக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து வந்தனர். இதனால் மக்கள் பட்டினம்பாக்கம் கடற்கரையோரப் பகுதிகளில் குவியத் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்துதான், பொதுநல வழக்கு தொடரப்பட்டடதாக தெரிகிறது. அந்த வழக்கில்தான், கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா எனக் கேள்வி எழுப்பினர். இருப்பினும் மெரினாவில் பொதுமக்களை இன்னும் அனுமதிக்கவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிமன்றம் சார்பில் ``கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அதேசமயம் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5-ம் தேதி பதிலளிக்க வேண்டும்" என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. மேலும் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. மீனவர்கள் பாதுகாப்பு குறித்த பொதுநல வழக்கில் சென்னை மெரினா கடற்கரையில் பராமரிப்பு, பொதுமக்களுக்கு எப்போது அனுமதி என்பது குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.