யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இரவோடு இரவாக இலங்கை அரசால் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’ ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது என்றிருக்கிறார். 


விசிக தலைவர் திருமாவளன் ‘’ தமிழனத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்களத்தை ஆதிக்கத்தை தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்’’ என்றுள்ளார். 


மேலும் அமமுக டிடிவி தினகரன் , ‘’இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது.தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.