கந்த சஷ்டி கவசம் சொல்லும் கருத்துக்களை, ஆபாசமாகச் சொல்லிய காரணத்துக்காக, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல, அந்த வீடியோவில் பேசியிருந்த வி.ஜே. சுரேந்திரன், ஜூலை 17 ம் தேதி, புதுச்சேரியில் சரண் அடைந்திருந்தார்.

இவர்கள் இருவரில், செந்தில் வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் 2 நாட்களாக ஆய்வு செய்து வந்தனர்.

அங்குக் கிடைக்கப்பெற்ற ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். அனைத்துக்கும் பிறகு, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். இதுதவிர கறுப்பர் கூட்டத்திற்குச் சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸூக்கும் சீல் வைக்கப்பட்டது.

சரணடைந்திருந்த சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்திருந்தனர். அதில் உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, கூட்டம் கூட்டியது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்கள் மட்டுமன்றி, அந்த கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலின் கேமரா மேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளோடு, இந்து அமைப்பினரும் பாஜகவும் அளித்த கந்த சஷ்டி கவச அவமதிப்பு புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்தர் ஆகியோரை தனிப்பட்டு விசாரித்தனர். முடிவில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற வாசலில் வைத்து, வழக்கில் தொடர்புடைய சுரேந்திரன் பத்திரிகையாளர் மத்தியில் பேசியிருந்தார். அப்போது, `எங்கள் மீது புகார் அளித்தவர்கள், எங்கள் விட்டிலுள்ளவர்களை மனரீதியாகத் துன்புறுத்தி, அவர்களுக்கு அழுத்தம் தரத்தொடங்கிவிட்டனர். அதனால்தான் நான் சரணடைந்து இருக்கின்றேன். 

நாங்கள் இல்லாத விஷயத்தை வீடியோவில் சொல்லவில்லை. இருக்கும் விஷயத்தை, மக்களுக்குப் புரியும்படியான மொழியில் பேசியிருந்தோம். அவ்வளவுதான். அது தவறெனச் சொல்லி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எதுவாகினும் சட்டரீதியாகச் சந்திக்க, நாங்கள் தயார் தான்!' எனச் சொல்லியிருந்தார்.

இப்படித் தொடர்ந்து கொண்டிருந்த இந்த நேற்று கறுப்பர் கூட்டத்தில் வெளியாகியிருக்கும் அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டது. வருங்காலத்தில் சர்ச்சையாகலாம் என்ற கணிப்பின் அடிப்படையில் அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் சார்பில் சொல்லப்பட்டது. சுரேந்திரன், செந்தில்நாதன் மட்டுமன்றி, கேமரா மேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கம், பிரபலங்கள் பலரும் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசியதற்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். முக்கியமாக திமுக தலைவர்கள், அதிமுக பிரமுகர்கள் எனப் பலரும் கறுப்பர் கூட்டத்துக்கு எதிராகவும் - தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை எனக் கூறி வந்தனர். பாஜக தரப்பிலிருந்து, இந்த விவகாரத்துக்கு நேரடி எதிர்ப்புகள் வைக்கப்பட்டது. கறுப்பர் கூட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில், மிக உறுதியாக இருந்த ஒரே கட்சி, பாஜக. இவர்கள் மட்டுமல்லாமல், இவ்விஷயத்தில் தீவிரமாக இருந்தது, வலதுசாரி ஆதரவாளர்கள்.

இந்தப் பட்டியலில், இன்று நடிகர் ரஜினிகாந்த்தும் இணைந்திருக்கிறார். கறுப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், ``கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்திக் கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்துச் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக, தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்து வேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா" எனக்கூறியிருக்கிறார். இந்த ட்வீட்டை, #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேக் போட்டுப் பகிர்ந்திருக்கிறார் சூப்பர்ஸ்டார். 

பல நாள்கள் கழித்துப் போடப்பட்டுள்ள சூப்பர்ஸ்டாரின் இந்த ட்வீட்டுக்கு, பல விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும் வைக்கப்பட்டு வருகின்றது. 

- பெ.மதலை ஆரோன்