மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது தீவிரமாகி வரும் சூழலில், அங்கு தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அனுமதிக்கப்படுவோருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான முடிவுகள் வர தாமதப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை அறிந்த நீதிமன்றம், தானாக முன்வந்து அனைத்தையும் இன்றைய தினம் விசாரித்தது.

அதன்முடிவில், `இது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்?' என மருத்துவமனைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஆகியோர் விரிவான நிலை அறிக்கையை விரைந்து, தொடர்புடைய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழக்குத் தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரனைக்கு வருவதற்கு முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் தரப்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. அவற்றோடு சேர்த்து கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தானாக முன்வந்து சில கேள்விகளையும் முன்வைத்து, விடை பெற வேண்டும்" எனக்கூறப்பட்டிருந்துள்ளது. 

அதனடிப்படையில்தான், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்கிறது. மனுவில் விரிவாக கூறப்பட்டிருந்த சில தகவல்கள் இங்கே...

1. கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், துரிதமாக சோதனைகளை முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனரா? பிசிஆர் பரிசோதனை கருவிகள் உள்ளனவா?

2. கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்?

3. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள், தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த விபரங்கள் என்ன?

4. கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? அவை முறையாக தொற்று பரவா வண்ணம் பராமரிக்கப்படுகின்றனவா? அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுகிறதா?

5. முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தேவையான PPE உடைகள் உள்ளனவா?

6. கரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவதற்காக என்ன வசதி செய்யப்பட்டுள்ளது?

என்பது போன்ற வினாக்கள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவற்றோடு சேர்த்து நீதிபதிகள் சார்பில், ``உடல்களை அடக்கம் செய்ய 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்க நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறதே. அது என்ன பிரச்னை?" என்றும் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அரசுத்தரப்பில், ``கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அவ்வாறு பணம் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

இடையில், அரசு தரப்பிலான வழக்கறிஞர் ``மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அரசு விவசாயக் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவை தனிமைப்படுத்துதல் முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 2470 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், 2225 படுக்கைகள் காலியாக உள்ளன. இறந்தவர்களின் உடல் மதுரை தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில் தகனம் செய்யப்படுகின்றன. மதுரையில் இதுவரை 1,07,167 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 8358 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என தரவுகள் தெரிவித்திருந்தார்.

முழுஅறிக்கை கேட்கப்பட்டு இன்றைய தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் அறிக்கையோடு, ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு நடக்கும் எனக்கூறி, அதுவரை வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.

- பெ.மதலை ஆரோன்