கள்ளக்குறிச்சி அருகே 4 வருடமாக காதலித்து திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண், திடீரென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து உள்ள லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவரின் மகள் 23 வயதான அன்னை சத்யா என்ற இளம் பெண், நர்சிங் படிப்பு முடித்துள்ளார். 

அதே போல், அங்குள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் 28 வயதான சிவராமன் என்ற இளைஞரும், நர்சிங் மாணவி அன்னை சத்யாவும், கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்து உள்ளனர். காதலர்களான அந்த ஜோடி சினிமா, பீச் என பல்வேறு இடங்களுக்குச் சென்று இன்புற்று தங்களது காதலை மேலும் வளர்த்து வந்துள்ளனர். இதனால், அவர்களுக்குள்ளான காதலின் நெருக்கம் அதிகரித்து உள்ளது. 

இந்நிலையில், இளம் பெண் அன்னை சத்யா வீட்டில் திருமண பேச்சு அடிப்பட்டு உள்ளது. இதனையடுத்து, காதலன் சிவராமனிடம் “என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு” காதலி அன்னை சத்யா கூறியுள்ளார். ஆனால், காதலன் சிவராமனோ அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த காதலி அன்னை சத்தியா, தன் காதலனிடம் பதில் சொல்லச் சொல்லி தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்த காதலன் சிவராமன், “உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது” என்று, கூறி திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அன்னை சத்தியா, காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், காதலன் ஏதேதோ பேசிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, “காதலன் தான் வேண்டும். காதலனைத் தான் திருமணம் செய்துகொள்வேன்” என்று, அடம் பிடித்த இளம் பெண் அன்னை சத்தியா, நேராக காதலன் சிவராமன் வீட்டின் முன்பு வந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், சிவராமன் வீட்டில் இருந்து யாரும் அவரை பார்க்க வெளியே வராததால், கடும் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கண் இமைக்கும் நேரத்திற்குள் திடீரென்று தான் வைத்து இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்று உள்ளார். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து அன்னை சத்யாவின் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலைப் பறித்துக்கொண்டு, அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றினர். 

மேலும், இது தொடர்பாக அரசம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளம் பெண்ணை மீட்டனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, 4 ஆண்டுகளாகக் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டின் முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளம் பெண் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம், சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.