“ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வென்றால் ஒரு கோடி ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சற்று முன்பாக தொடங்கி வைத்தார்.

அப்போது, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழக விளையாட்டு வீரர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “விளையாட்டு போட்டியில் டீம் ஸ்பிரிட் மிக முக்கியம்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “உடலுக்கும், மனதுக்கும் ஊக்கம் தரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது” என்றும், அவர் பெருமையோடு கூறினார்.
 
“விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் மிக அவசியம்” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தினார். 

மேலும், “விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது” என்பதையும், அவர் அப்போது நினைவுகூர்ந்தார். 

“விளையாட்டு வீரர்களுக்கு 10 லட்சம் வரை கருவிகள், பயண சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்றும், ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.

“விளையாட்டு போட்டிகளில் அணி ஒற்றுமை முகவும் முக்கியமானது என்றும், வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும் களத்தில் ஓரணியாக செயல்பட்டால்
வெற்றி சாத்தியம் என்றும், விளையாட்டு வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் அவசியம் இருக்க வேண்டும்” என்றும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, ஏற்கனவே ஒரு வீராங்கனைக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், மற்ற 6 பேருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார். 

“நாம், விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால், அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை” என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
 
முக்கயமாக, “ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்றும், முதலமைச்சர் அப்போது அறிவித்தார். 

இவற்றுடன், “ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கப் பதக்கம் வென்றால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.