தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை அடைந்துள்ளது. அத்துடன், அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெறும் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.

இந்த நிலையில், 16 வது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக இடம்பெற இருக்கிறது. இதனால், “அதிமுகவில், எதிர்க்கட்சி தலைவர் யார்?” என்கிற மோதல், மிகத் தீவிரமாக வலுத்து வந்தது. 

அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போதே, முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து, அதன் பிறகு அடங்கியது. முதல்வர் வேட்பாளர் பிரச்சனையானது எப்படி முடிவுக்கு வந்ததோ, அது போலவே, இந்த பிரச்சனையும் முடிவுக்கு வரும் என்றும், அக்கட்சித் தொண்டர்கள் பேசத் தொடங்கினார்கள்.

இப்படியான சூழ்நிலையில் தான், கடந்த 7 ஆம் தேதி மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்றார்கள். 

அப்போது, “தமிழக சட்டமன்ற எதிர்கட்சிக் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு” இருப்பதாகக் கூறப்பட்டது. 

அந்த கூட்டத்தில் “எதிர்க்கட்சித் தலைவர் யார்?” என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் அப்போது ஏற்பட்டது.

முக்கியமாக, அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மிக கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம் “எதிர்க்கட்சித் தலைவர் யார்?” என்பதை முடிவு செய்ய முடியாமல், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவுற்றது.

இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் இன்றைய தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா 2 வது அலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்திருந்தது. 

அரசின் இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி, அரசு கூட்டங்கள் தவிர்த்துப் பிற கூட்டங்கள் நடத்துவதற்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

எனினும், புதிய சட்டமன்றம் நாளைய தினம் கூட இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரை இன்றே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய நெருக்கடி அதிமுக தள்ளப்பட்டது.
 
இதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா நேற்று மனு அளித்தார். இதற்கு, போலீசார் தரப்பிலும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் படி, திட்டமிட்டபடி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக “எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்” ஆகிய 2 பேரில் யாரை தேர்வு செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் நீடித்தது. 

இந்த நிலையில், சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கோபத்துடன் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக வின் டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது குறித்து, தமிழக சட்டப்பேரவை செயலரிடம் அதிமுக கடிதம் அளித்துள்ளது.