தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக “கட்டளை மையம்” என்கிற “வார் ரூம்” அமைக்கப்பட்டு எப்படிச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2 வது அலையானது, மிக தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்புகளும், தாக்கங்களும் ஏற்பட்டு வருகிறது. 

இப்படியான நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மருத்துவ அவசர நிலை என்று சொல்லக் கூடிய அளவுக்குத் தொற்று பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து இருப்பதால், சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் “வார் ரூம்” எனப்படும், “அவசர ஒருங்கிணைந்த கட்டளை மையம்” உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த வார் ரூமின் ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமது என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த வார் ரூமின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வு செய்ய அழகு மீனா என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

அத்துடன், ஆக்ஸிஜன் இருப்பு, தேவையைக் கண்காணிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமாரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் தேவையைக் கண்காணிக்க வினித் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா மருத்துவமனைகளைக் கண்காணிக்கக் கார்த்திகேயன் என்கிற அதிகாரியும் நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

ஆக மொத்தமாக, கொரோனாவை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வார் ரூமிற்காக, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இவற்றுடன், தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் “104” என்கிற சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைப்பது, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பது ஆகியவற்றுக்கான சிறப்பு மையமாக இது செயல்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வார் ரூமானது, 24 மணி நேரமும் இணையவழி மூலம் கண்காணித்து, பல்வேறு மருத்துவமனைகளில் காளியாக இருக்கும் படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து, அதன் தேவைக்கு ஏற்ப உதவிக் கரம் நீட்டப்படும். 

ஆக்சிஜன் தொடர்பாக 104 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது டிவிட்டரிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும், இப்படியாக சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய தகவல்கள் மற்றும் 104 எண்ணுக்கு வரக்கூடிய புகார்கள் மீது, தேவைகளைப் பூர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுத் தீர்வு காண்பார்கள் என்றும், தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அதிகரித்துக் காணப்படும் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, “வார் ரூம்” தொடங்கப்பட்டிருப்பது இன்னும் நல்ல பலனைத் தரும் என்கிற நம்பிக்கையும் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.