தமிழகம் முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக இன்று 630 கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளன.

இதேபோன்று, 1,400 மினி கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 மினி கிளினிக்குகள் நகர்புறங்களிலும் மற்றும் 200 நகரும் மினி கிளினிக்குகளும் அமைக்க திட்டமிட்டப்பட்டு இருக்கிறது. 


இந்த அம்மா மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை செயல்படும். 


 ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் சாதாரண சளி, காய்ச்சலுக்கு அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மினி கிளினிக் திட்டத்தை, சென்னையில், ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 

” தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காகவே இந்த அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது “ என்று இத்திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.