A1 புகழ் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். படத்தின் இரண்டு லுக் கொண்ட போஸ்டர்கள் வெளியானதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர் சந்தானம் ரசிகர்கள். பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். 

கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். கடந்த வாரம் இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கினார் சந்தானம். படப்பிடிப்பு ஒரு புறம் நடக்க, தான் நடித்த காட்சிகள் வரை டப்பிங் செய்துள்ளார். படத்தில் சந்தானம் கானா பாடகர் என்று கூறப்படுகிறது. சந்தானம் போகின்ற வேகத்தை பார்த்தால் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தார் சந்தானம். ஷூட்டிங் நிறைவானதையொட்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். சந்தானத்தின் வேகத்தை பார்த்த ரசிகர்கள், சிம்பு மற்றும் ஆர்யா பட்டியலில் சந்தானமும் இணைந்துள்ளார் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். 

சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை 3 படத்திற்கு விரைந்தார் ஆர்யா. அதே போல் சிலம்பரசனும் ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு மாநாடு படத்தின் புதுச்சேரி படப்பிடிப்பை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு பிஸ்கோத் திரைப்படத்தை வெளியிட்டார் சந்தானம். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான டிக்கிலோனா படமம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. சினிஷ் தயாரித்த இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். டைம் ட்ராவல் பற்றிய படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.