கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியவுடன், மெரினா கடற்கரை கடந்த மார்ச் 21ஆம் தேதி மூடப்பட்டது. அதன்பின் தமிழக அரசு பொதுமுடக்க தளர்வுகள் பல்வேறு இடங்களுக்கு அளித்த போதிலும், மெரினா கடற்கரைக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. 


இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடற்கரையை திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது. 


அதன்படி பல்வேறு விதிமுறைகளுடன் இன்று முதல் பொதுமக்களுக்கு மெரினா கடற்கரை திறக்கப்பட்டு இருக்கிறது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. 


சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் , நீலாங்கரை, திருவான்மியூர், மாமல்லபுரம் கோயில் கடற்கரை மற்றும் சென்னையில் உள்ள பூங்காங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணற்பரப்பு, சர்வீஸ் சாலைகள், கடற்கரையில் உள்ள பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு உள்ளனர். 


8 மாதங்களாக நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலையில்,  இந்த தளர்வானது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. 


மாமல்லபுரத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் மாமல்லபுரத்திற்கு வருவோர் நுழைவுக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் 8 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.